சென்னை: நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், மாநில சமரச தீர்வு மையம் சார்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் பிரச்சார விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு சமரச தீர்வு மையம் செயல்படுகிறது.
உயர் நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை வீண் தாமதம், வீண் செலவுகள் இல்லாமல் சுமுகமாக தீர்க்க இந்த மையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் செயல்பாடுகள் குறித்து மக்கள் அறிந்துகொள்ளும் வகையில், விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாநில சமரச தீர்வு மையத்தில் தேசத்துக்கான சமரச விழிப்புணர்வு பிரச்சார பேரணி நேற்று நடத்தப்பட்டது. தீர்வு மையத்தின் இயக்குநர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அவர் கூறும்போது, “மாநிலம் முழுவதும் இந்த சமரச விழிப்புணர்வு பிரச்சாரம் 90 நாட்கள் நடைபெற உள்ளது. விவாகரத்து போன்ற திருமண பிரச்சினைகள், குடும்ப வன்முறை, விபத்து இழப்பீடு, காசோலை மோசடி போன்ற வழக்குகளுக்கு சமரச முறையில் தீர்வு காணப்படும்.
தாலுகா மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் மூலமாக காணொலி முறையிலும் சமரச தீர்வு மைய வழக்குகளை விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள், வழக்கறிஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். விழிப்புணர்வு பேரணியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.