திருவனந்தபுரம்: நிபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அந்த மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் கோழிக்கோடு, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக நிபா வைரஸ் பாதிப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு அருகே குமரமபுத்தூர் பகுதியை சேர்ந்த 57 வயது நபர் ஒருவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை.
இதையடுத்து அவர், மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மன்னா அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த மருத்துவமனையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானதையொட்டி மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் திரவ மாதிரிகளை சேகரித்து பரிசோதித்ததில் அவர் நிபா வைரஸ் பாதித்து இறந்தது தெரியவந்தது. இதனால் கேரளாவில் நிபா வைரஸ் பாதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2-ஆக உயர்ந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மலப்புரத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மஞ்சேரி அரசு மருத்துவமனையிலிருந்து இறந்தவரின் உடல் திரவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள வைராலஜி ஆய்வகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இத்தகவலை கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இதையடுத்து மாநில சுகாதாரத்துறை நிபா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மலப்புரம், பாலக்காடு, பெரிந்தல்மன்னா, கோழிக்கோடு பகுதிகளில் தீவிரப்படுத்தியுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக மாவட்ட சுகாதாரத்துறையால் நிபா வைரஸ் பாதித்து இறந்த நபரின் வீட்டை சுற்றி 3 கிலோமீட்டர் சுற்றளவு தூரம் உள்ள பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் இங்குள்ள பகுதிக்குள் வெளியில் இருந்து நபர்கள் வரவும், இங்குள்ள மக்கள் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த டலத்தில் இருப்பவர்கள் முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
46 பேர்: நிபா வைரஸால் பாதித்து இறந்த 2-வது நபருடன் மொத்தம் 46 பேர் தொடர்பில் இருந்தனர். இதையடுத்து இறந்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே நிபா வைரஸ் அறிகுறிகளுடன் பெரிந்தல்மன்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.