புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சிஇஓ தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான முதற்கட்ட அறிக்கை கடந்த 12-ம் தேதி வெளியானது. இதையடுத்து, ஏர் இந்தியாவின் சிஇஓ கேம்பல் வில்சன், நிறுவன சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “விமான விபத்து நிகழ்ந்த பிறகு சில நாட்களுக்குள் ஏர் இந்தியாவின் ஒவ்வொரு போயிங் 787 விமானமும் சரிபார்க்கப்பட்டது. அனைத்து விமானங்களும் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இருந்தன. தேவையான அனைத்து சோதனைகளையும் நாங்கள் தொடர்ந்து மேற்கொள்கிறோம்.
தற்போது வெளியாகி உள்ள முதற்கட்ட அறிக்கையில், விமானத்தில் இயந்திரவியல் மற்றும் பராமரிப்பு சார்ந்த பிரச்சினைகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்படவில்லை. ஏனெனில், அனைத்து கட்டாய பராமரிப்புப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட அறிக்கை அதிக தெளிவை அளித்துள்ளது, கூடுதல் கேள்விகளையும் எழுப்பி உள்ளது. இந்த அறிக்கை விபத்துக்கான உறுதியான காரணம் எதையும் அடையாளம் காணவில்லை, எந்த பரிந்துரைகளையும் வழங்கவில்லை. விசாரணை இன்னும் முடியவில்லை. அதுவரை, முன்கூட்டியே முடிவுகளை எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். முழுமையான, விரிவான விசாரணையை நடத்த தேவையான அனைத்தையும் விசாரணை அதிகாரிகள் பெறுவதை உறுதி செய்ய நாங்கள் தொடர்ந்து அவர்களுக்கு ஒத்துழைப்போம்” என கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.
விமான விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை: கடந்த மாதம் 12-ம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ட்ரீம்லைனர் ரக விமானம், சில விநாடிகளில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உட்பட மொத்தம் 270 பேர் உயிரிழந்தனர். ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார்.
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில், 15 பக்க முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) கடந்த 12-ம் தேதி வெளியிட்டது. அதில், “அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் ட்ரீம்லைனர் 787 ரக விமானம், ஓடுபாதையில் இருந்து மணிக்கு 283 கி.மீ வேகத்தில் மேலெழும்பியது. வானில் 3 விநாடிகள் வரை பறந்து 333 கி.மீ வேகத்தை எட்டியதும், விமானத்தின் என்-1, என்-2 ஆகிய இரு இன்ஜின்களின் எரிபொருள் சுவிட்ச்கள், ஒரு விநாடி இடைவெளியில் அடுத்தடுத்து செயலிழந்து ‘ஆஃப்’ ஆனதால், இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் செல்லவில்லை.
எரிபொருள் சப்ளை திடீரென நின்றுபோனதால், இன்ஜினுக்குள் சுழலும் விசிறியின் வேகம் குறைந்தது. இதனால், உந்து சக்தி கிடைக்காததை உணர்ந்த ஒரு விமானி, அனைத்து சுவிட்ச்களும் சரியாக உள்ளதா என பார்த்துள்ளார். அப்போது எரிபொருள் சுவிட்ச்‘ஆஃப்’ ஆகியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், மற்றொரு விமானியிடம், ‘எரிபொருள் சுவிட்ச்களை ஏன் ‘ஆஃப்’ செய்தீர்கள்?’’ என்று கேட்கிறார். ‘‘நான் ஆஃப் செய்யவில்லை’’ என்று அவர் அதிர்ச்சியுடன் கூறுகிறார்.
இந்த நிலையில், சுவிட்ச் ஆஃப் ஆன 10 விநாடிகளுக்கு பிறகு, விமானத்தின் முதல் எரிபொருள் இன்ஜின் மீண்டும் சுவிட்ச் ஆன் செய்யப்பட்டது. அடுத்த 4-வது விநாடியில் 2-வது இன்ஜினின் எரிபொருள் சுவிட்ச் ‘ஆன்’ செய்யப்பட்டது. இதனால் விமானத்தின் முதல் இன்ஜின் மீண்டும் இயங்கத் தொடங்கியது. 2-வது இன்ஜின் இயங்குவதற்குள், 213.4 டன் எடை மற்றும் 54,200 கிலோ எரிபொருளின் எடையுடன் விமானம் மீண்டும் வானில் எழும்புவதற்கு தேவையான உந்து சக்தி கிடைக்காமல் கீழே இறங்கியது.
அடுத்த 9-வது விநாடியில் பைலட் ‘‘மே டே, மே டே, மே டே’’ என விமான கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை விடுத்தார். இதை அடுத்து, விமானியிடம் விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரி, விவரம் கேட்கிறார். ஆனால் பதில் இல்லை. சிறிது நேரத்தில் விமானம் மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விமானம் மேலெழும்பிய 26 விநாடிக்குள் அனைத்தும் நடந்து விபத்து நிகழ்ந்துள்ளது.” என தெரிவிக்கப்பட்டது.