திருவள்ளூர்/ சென்னை: சென்னையில் இருந்து பெட்ரோல், டீசல் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் நேற்று அதிகாலை திருவள்ளூரில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின. இந்த விபத்தால், விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை துறைமுகத்தில் இருந்து 2 இன்ஜின்கள் கொண்ட சரக்கு ரயில், நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாலாஜா சைடிங் நிலையத்துக்கு புறப்பட்டது. தலா 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 45 டேங்கர்களில் டீசலும், 5 டேங்கர்களில் பெட்ரோலும் நிரப்பப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4.55 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்து சென்றபோது, 2 இன்ஜின்கள், ஒரு டேங்கர் ஆகியவை திடீரென தனியாக பிரிந்ததாக கூறப்படுகிறது. இதனால், ரயில் நிலை தடுமாறி, 18 டேங்கர்கள் அடுத்தடுத்து தடம்புரண்டன. பெட்ரோல், டீசல் நிரப்பிய டேங்கர்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. மளமளவென மற்ற டேங்கர்களுக்கும் தீ பரவியதில், டேங்கர்கள் வெடித்து சிதறின. இதனால், பல அடி உயரத்துக்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது.
திருவள்ளூர் ரயில் நிலைய மேலாளர் உடனடியாக ரயில் பாதையில் செல்லும் உயர்நிலை மின் இணைப்பை துண்டித்தார். ரயில்வே அதிகாரிகள் கொடுத்த தகவலின்பேரில், திருவள்ளூர், திருவூர், தேர்வாய் கண்டிகை சிப்காட், ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 15-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. ரசாயன நுரை மற்றும் தண்ணீரை பீய்ச்சியடித்து, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் அதிக அளவில் சிதறியதால் ஆங்காங்கே தீ எரிந்தபடி இருந்தது.
மக்கள் பாதுகாப்பாக வெளியேறினர்: அருகே குடியிருப்பு பகுதிகள் இருந்ததால், பதற்றம் ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், எஸ்.பி. சீனிவாசபெருமாள் தலைமையில் வருவாய் துறையினர், போலீஸார், மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து, விபத்து பகுதி அருகே மின் இணைப்பை துண்டித்தனர். அப்பகுதியில் வசிக்கும் 50 இருளர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா தலைமையிலான ரயில்வே அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், அரக்கோணத்தில் இருந்து வந்த 60 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து, தீயில் சிக்காத 32 டேங்கர்கள், ரயில் இன்ஜின்களை அகற்றி, பாதுகாப்பாக வேறு இடத்துக்கு கொண்டு சென்றனர். தீயணைப்பு வீரர்கள் 11 மணி நேரம் கடுமையாக போராடிய நிலையில், மாலை 4 மணி அளவில் தீயை அணைத்தனர். தொடர்ந்து, சேதமடைந்த ரயில் பாதைகள், உயர்நிலை மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணிமாலை 6 மணிக்கு பிறகும் நீடித்தது.
இந்த விபத்தில், டீசல் நிரப்பிய 14 டேங்கர்கள், பெட்ரோல் நிரப்பிய 4 டேங்கர்கள் முற்றிலும் நாசமாகின. அந்த டேங்கர்களில் இருந்த சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான பெட்ரோல், டீசல் எரிந்து நாசமானதாக தீயணைப்பு துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சா.மு.நாசர், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம்.சிங் ஆகியோர் வந்து, சீரமைப்பு பணிகளை பார்வையிட்டனர். தமிழக ரயில்வே காவல் துறை ஐ.ஜி. பாபு, காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழக ரயில்வே காவல் துறை ஏடிஜிபி தலைமையிலான 3 தனிப்படையினர் விபத்து குறித்து விசாரணை நடத்துகின்றனர். விபத்து குறித்து விசாரிக்க விசாரணை குழுவை அமைத்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் உத்தரவிட்டுள்ளார்.
79 ரயில் சேவைகள் பாதிப்பு: சரக்கு ரயில் தீ விபத்தால், சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் விரைவு ரயில், புறநகர் மின்சார ரயில் சேவை நேற்று கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் – மைசூரு வந்தே பாரத் விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், கோவை விரைவு ரயில், சதாப்தி விரைவு ரயில், திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் உட்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. காச்சிகுடா – செங்கல்பட்டு விரைவு ரயில் உட்பட 8 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, 79 விரைவு ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. புறநகர் மின்சார ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், அரசு போக்குவரத்து கழகம்
(விழுப்புரம் கோட்டம்) சார்பில் காட்பாடி, குடியாத்தம், அரக்கோணம்,திருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்களில் இருந்து 270-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.