லண்டன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் லெக் திசையில் சிக்ஸர் விளாசினார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பந்த் விளாசும் 35-வது சிக்ஸர் இதுவாகும்.
இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சிக்ஸர்கள் விளாசியிருந்த மேற்கு இந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸின் (34 சிக்ஸர்கள்) சாதனையை முறியடித்தார் ரிஷப் பந்த். இந்த வகை சாதனையில் டிம் சவுதி (30), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (27), ஷுப்மன் கில் (26) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் ரோஹித் சர்மாவை சமன் செய்தார் ரிஷப் பந்த். இருவரும் தலா 88 சிக்ஸர்கள் விளாசி உள்ளனர். இந்த வகையில் வீரேந்திர சேவக் 90 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
தோனி சாதனை சமன்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் 74 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பந்த் 50 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 8-வது முறையாகும். இதற்கு முன்னர் தோனி 8 அரை சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. இதை தற்போது ரிஷப் பந்த் சமன் செய்துள்ளார்.