லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் எடுத்த ரன்களை இந்தியா சமன் செய்தது. கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 104, பிரைடன் கார்ஸ் 56, ஜேமி ஸ்மித் 51 ரன்கள் சேர்த்தனர்.
இதையடுத்து பேட் செய்த இந்திய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 43 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 53, ரிஷப் பந்த் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது.
பிரைடன் கார்ஸ் வீசிய 54-வது ஓவரின் கடைசி 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார் கே.எல்.ராகுல். மறுபுறம் சீராக ரன்கள் சேர்த்த ரிஷப் பந்த், பென் ஸ்டோக்ஸ் வீசிய 59-வது ஓவரின் கடைசி பந்தை லெக் திசையில் சிக்ஸர் விளாசி அரை சதம் கடந்தார். இது அவரது 17-வது அரை சதமாக அமைந்தது.
சிறப்பாக விளையாடி வந்த ரிஷப் பந்த் 112 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்த நிலையில் ஷோயிப் பஷிர் பந்தை தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடினார். ஆனால் பந்தை விரைவாக எடுத்து பென் ஸ்டோக்ஸ் அபாரமாக த்ரோ செய்ய ரிஷப் பந்த் ரன் அவுட் ஆனார். 4-வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஜோடி 198 பந்துகளில் 141 ரன்கள் சேர்த்தது. ரிஷப் பந்த்தின் ரன் அவுட் இங்கிலாந்து அணிக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 65.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உணவு இடைவேளைக்கு பின்னர் இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. நிதானமாக விளையாடிய கே.எல்.ராகுல் 176 பந்துகளில், 13 பவுண்டரிகளுடன் தனது 10-வது சதத்தை விளாசினார். 100 ரன்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுல், ஷோயிப் பஷிர் வீசிய பந்தை டிரைவ் செய்ய முயன்ற போது பந்து மட்டை விளிம்பில் பட்டு முதல் சிலிப் திசையில் நின்ற ஹாரி புரூக்கிடம் கேட்ச் ஆனது.
இதன் பின்னர் களமிறங்கிய நித்திஷ் குமார் ரெட்டி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்திய நிலையில் தனது ரன் கணக்கை 21-வது பந்தில்தான் தொடங்கினார். மறுமுனையில் ஜடேஜா சீராக ரன்கள் சேர்த்தார். நிதானமாக விளையாடிய நித்திஷ் குமார் ரெட்டி 91 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஜேமி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
119.2 ஓவர்களில் இந்திய அணி 387 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஜடேஜா 72, ஆகாஷ் தீப் 7, பும்ரா 0, வாஷிங்டன் சுந்தர் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஒரு ஓவருக்கு அந்த 2 ரன்கள் எடுத்தது. களத்தில் பென் டக்கெட் மற்றும் ஸாக் கிராவ்லி உள்ளனர்.
100-ல் 100-வது அவுட்: லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 100 ரன்கள் விளாசிய நிலையில் அவுட் ஆனார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 100 ரன்களில் பேட்ஸ்மேன் ஆட்டமிழப்பது இது 100-வது முறையாகும்.