புதுடெல்லி: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா (38). இவர் கடந்த 2017-ம் ஆண்டு தனது தொழில் பங்குதாரரான ஏமன் நாட்டைச் சேர்ந்த தலோல் அப்டோ மஹ்தி என்பவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. விசாரணையின் முடிவில் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், அவரது இறுதி மேல்முறையீடும் 2023-ல் நிராகரிக்கப்பட்டது.
தற்போது ஏமனின் தலைநகரான சனாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிமிஷாவின் மரண தண்டனை ஜூலை 16-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த நிலையில் அவருக்கு சட்டப்பூர்வமாக உதவ சர்வதேச நடவடிக்கை கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் உச்ச நீதி மன்றத்தில் நேற்று ஆஜரானார். அப்போது, நிமிஷா பிரியாவை காப்பாற்றுவதற்கான ராஜதந்திர வழிகளை மத்திய அரசு விரைந்து ஆராய வேண் டும் என்று உச்சநீதிமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை ஜூலை 14-ம் தேதி விசா ரணைக்கு பட்டியலிட்டது. ஷரியத் சட்டத்தின் கீழ் இறந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு (பிளட் மணி) செலுத்துவதன் மூலம் குற்றவாளி மன்னிக்கப்படலாம்.
இந்த முறையை பின்பற்றி கேரள செவிலியரை மீட்க மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான மனுவை அட்டர்னி ஜெனரலுக்கு அனுப்பி அவரின் உதவியை கோருமாறு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது.