சென்னை: கடலூர் ரயில் விபத்து சம்பவத்தை தொடர்ந்து, ரயில்வே கேட்களில் பின்பற்ற வேண்டிய 11 நடைமுறைகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது பாசஞ்சர் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியம் ஒருகாரணமாக இருந்தாலும், இந்த கேட்டில் இன்டர்லாக்கிங் செய்யப்படாமல் இருந்தது மற்றொரு காரணமாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே பாதுகாப்பு விஷயங்கள் தொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் அனைத்து ரயில்வே மண்டல அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு, ரயில்வே கேட் அமைந்திருக்கும் லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு 11 முக்கிய நடைமுறைகளை பின்பற்றும்படி இந்திய ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அனைத்து ரயில்வே கேட் பகுதிகளிலும் போதிய பதிவு அமைப்புடன் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பகுதிகளுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். சோலார் சாதனம், பேட்டரி மூலமாகவும் மின்சாரம் வழங்கலாம். இதை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். இதுபோல, அனைத்து ரயில்வே கேட்களையும் இன்டர்லாக்கிங் முறைக்கு மாற்ற வேண்டும். இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத ரயில்வே கேட்களை நாள்தோறும் ஆய்வு செய்யவேண்டும். ரயில்வே சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்கும் கட்டுமான பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இன்டர்லாக்கிங் செய்யப்படாத கேட்களில் குரல் பதிவு அமைப்பு செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். அனைத்து ரயில்வே கோட்டங்களிலும் இன்டர்லாக்கிங் செய்யப்படாத ரயில்வே கேட் பகுதிகளில், ரயில் வருவதை ஒலி பெருக்கிகள் மூலமாக அறிவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.