சென்னை: தெற்கு ரயில்வேயில் 4 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்பட உள்ளது. ரயில்வே வாரியத்தின் உத்தரவுப்படி, முன்பதிவு இல்லாத பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் கூடுதலாக இணைத்து இயக்கப்படுகின்றன.
அந்த வகையில், மேலும் 4 விரைவு ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்பட உள்ளது. மும்பை சி.எஸ்.எம்.டி. – எழும்பூர் விரைவு ரயிலில் (22157-22158) இரு மார்க்கத்திலும் வரும் செப்.5-ம் தேதிமுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்படும். எழும்பூர் – சேலம் விரைவு ரயிலில் (22154-22153) இரு மார்க்கத்திலும், வரும் செப்.6-ம் தேதிமுதல் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்படும்.
தாதர் – புதுச்சேரி விரைவு ரயிலில் (11005-11006) வரும் செப்.7-ம் தேதியிலிருந்தும், திருநெல்வேலி – தாதர் விரைவு ரயிலில் (11021-11022) வரும் செப்.9-ம் தேதியிலிருந்தும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் 4 ஆக அதிகரித்து இயக்கப்படும். இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.