சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள மருந்து ஆய்வாளர் பணியிடங்களை அடுத்த வாரத்துக்குள் கலந்தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உள்ளன. மேலும், மொத்த விற்பனையகங்களும் செயல்பட்டு வருகின்றன.
அவற்றின் செயல்பாடுகள், உற்பத்தி மற்றும் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரத்தை தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தும் பணியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். போலி மருந்துகளோ, தரமற்ற மருந்துகளோ கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் மருந்து விற்பனையகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
தற்போது தமிழகம் முழுவதும் 120 மருந்து ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். காலியாக உள்ள 18 இடங்களை நிரப்பக் கோரி அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அதில் 14 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு அடுத்த வாரத்துக்குள் நடத்தப்படவுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.