சென்னை: போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்கில், கடந்த மாதம் 23-ம் தேதி நடிகர் ஸ்ரீகாந்த்தும், கடந்த 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர் இந்த வழக்கில் ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள், நீதிபதி நிர்மல்குமார் முன் விசாரணைக்கு வந்தபோது, ஸ்ரீகாந்த் தரப்பில், இந்த வழக்கில் முதல் எதிரியான பிரவீன் குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டதாகவும். ஸ்ரீகாந்திடம் இருந்து போதைப்பொருள் ஏதும் கைப்பற்றப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.
நடிகர் கிருஷ்ணா தரப்பில், அவரை கைது செய்ததற்கான காரணங்கள் ஏதும் தெரிவிக்காமல் காவல்துறை கைது செய்ததாகவும், அவரிடம் நடத்திய மருத்துவப் பரிசோதனையில், போதைப் பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை எனவும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், பிரசாத் என்பவரிடம் நடத்திய விசாரணையில் போதைப் பொருள் புழக்கம் குறித்து தெரிய வந்ததாகவும், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், முதல் எதிரி பிரவீன் குமாரும், அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நிர்மல்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இருவரும் தலா ரூ.10 ஆயிரத்துக்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இரு நபர் ஜாமீனும் செலுத்த வேண்டும் எனவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இருவரும் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.