சென்னை: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 8) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நாளை முதல் 13-ம் தேதி வரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை 5 டிகிரி உயரும்: தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்குஉயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை 84 டிகிரி முதல் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கக்கூடும்.
சூறாவளி காற்று வீசும்: தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, அதைஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில்இன்று அதிகபட்சம் 65 கி.மீ. வேகத்திலும், வடதமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 6 செ.மீ., அவலாஞ்சியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 4 செ.மீ., நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட், மேல் கூடலூர், மேல் பவானி, கோவை மாவட்டம் சின்கோனா, வால்பாறை, ‘உபாசி’, சோலையாறில் 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலா, கூடலூர் சந்தை, பார்வூட், பந்தலூரில் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.