சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025 – 26-ல் 20% கூடுதலாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக முதல்வர் ஸ்டாலின் உயர்கல்வியும், மருந்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் வழங்கி வருகிறார்.
இதனால் கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இவ்வாண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பத்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதல்வர் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாணாக்கர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும், அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15% இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10% இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணவர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தியும், தமிழக முதல்வர் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க அறிவித்துள்ள அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பெற்றோர்களுக்கும், தமிழகத்துக்கு பெருமை சேர்த்து தங்களது வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.