சென்னை: கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. நேற்று கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்டது.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி பகுதிகளிலிருந்தும், தமிழகத்தில் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாச புரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் கடந்த மாதம் மொத்த விலையில் கிலோ ரூ.12 வரை விற்கப்பட்ட தக்காளி நேற்று கிலோ ரூ.25 ஆக உயர்ந்திருந்தது. வெளிச் சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.35 வரை உயர்ந்து இருந்தது. பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.32-க்கு விற்கப்பட்டது.
மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.50, கேரட் ரூ.40, முருங்கைக்காய், பாகற்காய் தலா ரூ.30, அவரைக்காய் ரூ.25, வெண்டைக்காய், கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.20, உருளைக்கிழங்கு ரூ.16, பீட்ரூட், நூக்கல், பெரிய முள்ளங்கி, வெங்காயம் தலா ரூ.15, முட்டைக்கோஸ் ரூ.8 என விற்கப்பட்டு வருகிறது.