புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஒரு கிளை மேலாளர் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிக்கு அடிமையாகி உள்ளார். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக பிஹார் அரசின் வங்கிக் கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை திருடி சூதாடி அல்லது பந்தயம் கட்டி உள்ளார். குறிப்பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்படுத்தல் அதிகாரிக்கான காசோலைகளில் போலி கையெழுத்தை இட்டும் காசோலை குளோனிங் மூலமும் மொத்தம் ரூ.31.93 கோடியை மோசடி செய்துள்ளார்.
பிடிபடாமல் இருப்பதற்காக, வாடிக்கையாளர்களின் ஆதார் மற்றும் கேஒய்சி விவரங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தி 21 போலி வங்கிக் கணக்குகளை திறந்துள்ளார். அதில் பணத்தை பரிமாற்றம் செய்து, அந்தப் பணத்தை வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத பந்தய செயலிகளுக்கு அனுப்பி உள்ளார்.
2021-ம் ஆண்டு வங்கி ஊழியர் ஒருவர் சந்தேகத்துக்கிடமான ஆர்டிஜிஎஸ் பரிமாற்றத்தைக் கண்டறிந்ததையடுத்து, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து அந்த கிளை மேலாளர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, தென்னாப்பிரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸில் உள்ள பந்தய செயலிகள் மற்றும் போலி நிறுவனங்களுக்கான தொடர்புகளை கண்டறிந்துள்ளது. இது தொடர்பான ஆதாரங்களை பிஹார் காவல் துறையினருடன் அமலாக்கத் துறை பகிர்ந்து கொண்டது.