புதுடெல்லி: “உலகளவில் வருவாய் சமத்துவத்தில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது” என்று உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
‘வறுமை மற்றும் சமத்துவம்’ தொடர்பான கினி குறியீட்டு அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. கினி குறியீடு என்பது ஒரு நாட்டின் மக்கள்தொகையில் வருவாய் மற்றும் செல்வ சமத்துவமின்மை தொடர்பான அளவீடாகும். கினி அட்டவணையின்படி 0 (சரியான சமத்துவம்) முதல் 100 (முழுமையான சமத்துவமின்மை) வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், குறைந்த மதிப்பெண் பெறும் நாடுகளில் மிகவும் சமமான விநியோகம் உள்ளதை குறிக்கும்.
இந்த அறிக்கையில் இந்தியாவை பற்றி கூறியிருப்பதாவது: இந்தியா 25.5 என்ற கினி குறியீட்டு மதிப்பெண் பெற்றுள்ளது, இது வருவாய் சமத்துவத்தில் உலகளவில் 4-வது சமமான நாடாக உள்ளது. ஸ்லோவாக் குடியரசு, ஸ்லோவேனியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு அடுத்து இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கினி குறியீட்டின்படி இந்தியா 25.5 புள்ளிகளை பெற்றுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு கினி அட்டவணையில் இந்தியா 28.8 மதிப்பெண் பெற்றிருந்தது. தற்போது ஸ்லோவாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3) மற்றும் பெலாரஸ் (24.4) ஆகிய மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களில் உள்ளன. சீனா (35.7) மற்றும் அமெரிக்கா (41.8) உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பொருளாதார நாடுகள், அனைத்து ஜி7 நாடுகள் மற்றும் ஜி20 நாடுகளை விடவும் இந்தியா பெற்றுள்ள 25.5 மதிப்பெண் வருவாய் சமத்துவ நிலை முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது.
உலகின் முக்கியமான பொருளாதார நாடுகளுக்கு நிகராக இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம். கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 17 கோடியே 10 லட்சம் பேர் மிகத் தீவிர வறுமை நிலையில் இருந்து முன்னேற்றம் கண்டுள்ளனர்.
மேலும், கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் வறுமையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 16.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வறுமை ஒழிப்புக்காக மத்திய அரசு பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்தியதே இதற்கு காரணமாக அமைந்துள்ளன.
பிஎம் ஜன் தன் யோஜனா (55 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு), ஆதார் அட்டை வழங்கியது (142 கோடி மக்கள்), வங்கிகளுக்கு நேரடியாக அரசு நலத்திட்ட உதவித் தொகை வழங்கியது (இதனால் கடந்த 2023 மார்ச் மாதம் வரையில் ரூ.3.48 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது) போன்ற மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக மக்களை சென்று சேருவதற்கு உதவி செய்துள்ளன.
தவிர ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை 41 கோடி சுகாதார அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ‘ஸ்டேண்ட் அப் இந்தியா’, பிஎம் விஸ்வகர்மா யோஜனா, 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் (பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா) போன்ற திட்டங்களும் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளன.
வருவாய் சமத்துவமின்மை உலகின் வளர்ந்த நாடுகளுக்கு கூட சவாலாக இருக்கும் நிலையில், தொழில்நுட்பம் சார்ந்த அரசு நிர்வாகம் எப்படி சமத்துவமின்மையை குறைக்கும் என்பதற்கு இந்தியாவின் நடவடிக்கைகள் சான்றாக உள்ளன என்று மத்திய சமூகநலத்துறை தெரிவித்துள்ளது.