பெங்களூரு: கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி, மைசூரு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணை நிரம்பியதை தொடர்ந்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாய பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 7 மணி நிலவரப்படி, 124.80 அடி உயரம் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 123.70 அடியாக உள்ளது. மைசூரு மாவட்டம் எச்.டி. கோட்டையில் 19.52 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் தற்போதைய கொள்ளளவு17.05 டிஎம்சி ஆக உள்ளது. அணையில் இருந்து 10,000 கன அடி நீர்திறந்துவிடப்பட்டுள்ளது.கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய இரு அணைகளில் இருந்தும் தமிழகத்துக்கு மொத்தமாக விநாடிக்கு 47 ஆயிரத்து 590 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.