சென்னை: பெண் போலீஸாரை பாதுகாப்பு பணியில்அதிகம் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தியது குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன் 30-ம் தேதி காணொளி வாயிலாக மாவட்ட, மாநகர அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில், பெண் போலீஸாரை பாதுகாப்புப் பணியில் அதிகம் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. போக்சோ குற்றங்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பிற குற்றங்களில் விரைவாக விசாரணை நடத்தி வழக்குகளை விரைந்து முடிக்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுதான் இந்த ஆலோசனை வழங்கப்பட்டது.
சட்ட விதிகளின்படி, போக்சோ வழக்குகளில், 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது. எனவே, பாதுகாப்பு பணிக்கு பெண் போலீஸாரை நியமிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. பெண் குற்றவாளிகளை கைது செய்தல், குற்றம்சாட்டப்பட்ட பெண்கள் மற்றும் பெண் சாட்சிகளின் வாக்குமூலங்களை விசாரித்து பதிவு செய்தல், பாதுகாப்பு பணியில் பெண்களின் கூட்டத்தைக் கையாளுதல் போன்ற பணிகளை பெண் போலீஸார் மட்டுமே செய்ய வேண்டும். இதுபோன்ற காரணங்களால்தான், வழக்கமான முறையில் மற்ற பாதுகாப்பு பணிகளுக்கு பெண் போலீஸார் அழைத்துச் செல்லப்படுவதில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.