நாகர்கோவில்: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்தக் கூட்டம், கிராம கமிட்டியினருக்கு நவீன ஐ.டி. கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் நான் பங்கேற்றேன். வரும் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று எம்.பி.எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால், கூட்டணி குறித்தும், எந்த தொகுதிகளைக் கேட்க வேண்டும், எவ்வளவு தொகுதிகள் கேட்க வேண்டும் போன்றவை குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமைதான் முடிவு செய்யும். எனினும், வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் இண்டியா கூட்டணி வெற்றிபெறும்.தவெக தலைவர் விஜய், மதவாத சக்திகளிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது. பாஜக மதவாதக் கட்சி. காங்கிரஸ் கட்சி எல்லோருக்குமான கட்சி, ஜனநாயகத்தை விரும்பும் கட்சி. தேர்தலை மட்டும் குறிக்கோளாக கொண்டு காங்கிரஸ் செயல்படுவதில்லை. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது ராபர்ட் புரூஸ் எம்.பி.ரூபி மனோகரன் எம்எல்ஏ உடனிருந்தனர்.