மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணை நடப்பாண்டில், 2-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
கர்நாடகாவில் பெய்த கனமழையால் கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து ஜூன் 29-ம் தேதி அணை முழு கொள்ளளவான 120 அடியைஎட்டியது. தொடர்ந்து அணைக்கு வந்த நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரிக் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், அணைக்கான நீர்வரத்து சரிந்து கடந்த 3-ம் தேதி நீர்மட்டம் 119.91 அடியாக குறைந்தது. இதற்கிடையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று மாலை நீர்மட்டம் 120 அடியை எட்டியது. நடப்பாண்டில் 2-வது முறையாக அணை நிரம்பிஉள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நேற்று மாலை நீர்வரத்து 51,501 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் ஆறு மற்றும் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தடை தொடர்கிறது.