ஸ்ரீநகர்: காஷ்மீரின் உதம்பூரில் உள்ள பசந்த்கர் பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி தீவிரவாதிகள் நடமாட்டம் கண்டறிப்பட்டது. அப்போது பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். 3 தீவிரவாதிகள் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் தப்பிச் சென்றனர். இவர்களை தேடும் பணி நடைபெற்றது.
இந்நிலையில், காஷ்மீரின் கிஸ்த்வரில் உள்ள கன்சல் மாண்டு என்ற அடர்ந்த வனப்பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக 3 நாட்களுக்கு முன் உளவுத் தகவல் கிடைத்தது.
அங்கு பாதுகாப்பு படையினர் கடந்த புதன்கிழமை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, மாலை 7.45 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் இருதரப்பு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. 2 அல்லது 3 தீவிரவாதிகள் வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கலாம் என பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர்.
2 நாட்களாக தீவிரவாதிகள் சிக்காததால், இவர்களை கண்டறிய ஹெலிகாப்டர், ட்ரோன்கள், மோப்ப நாய்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தேடுதல் பணியில் பாதுகாப்பு படையினர் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.