சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஓலா, ஊபர் போன்ற வாடகை கார் சேவைக் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது துரதிருஷ்டவசமானது. சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள அனுமதித்தது மக்கள் நலனுக்கு எதிரானது.
மேலும், ‘பீக் அவர்ஸ்’ கட்டண உயர்வு 2 மடங்காக உயர்த்திக்கொள்ள அனுமதித்திருப்பது ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்த கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதிப்புக்கு உள்ளாக்கும். இதை மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.