சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்றும் காலநிர்ணயம் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்தும் இந்த உட்கட்சி பிரச்சினை தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்றும் அதிமுகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம், வா. புகழேந்தி, திண்டுக்கல் சூர்யமூர்த்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், கே.சி,நரேன் பழனிசாமி உள்ளிட்டபலர் மனு அளித்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான தேர்தல்ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவுப்படி அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா என்பது குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி முடிவு செய்ய உத்தரவிட்டிருந்தது.
ஆனால் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்து 7 வாரங்கள் கடந்த பின்பும் அதிகார வரம்பு குறித்து தேர்தல் ஆணையம் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு காலவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும் எனக்கோரி பழனிசாமி தரப்பில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராக வேண்டிய நிலையில் தேர்தல் ஆணையம் அதிமுக மற்றும் இரட்டை இலை விவகாரம் தொடர்பான விசாரணையை காலதாமதம் செய்து வருவது ஏற்புடையதல்ல. இது தேவையற்ற பரப்புரைகளுக்கு வழிவகுத்து விடும் என்பதால் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு காலநிர்ணயம் செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், கே.சுரேந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான விசாரணை விரைவாக நடத்தி முடிக்கப்படும் என்றும், காலநிர்ணயம் எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கோரினார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி மற்றும் வா. புகழேந்தி தரப்பில் இந்த வழக்கின் ஆவண நகல்கள் தங்களுக்கு வழங்கப்படவில்லை என புகார் தெரிவித்தனர். அதையடுத்து வழக்கின் எதிர்மனுதாரர்களுக்கு வழக்கு தொடர்பான நகல்களை வழங்க பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஜூலை 10-க்கு தள்ளிவைத்துள்ளனர்.