மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 19,286 கனஅடியாகவும், மதியம் 24,735 கன அடியாகவும், மாலை 29,423 கனஅடியாகவும் அதிகரித்தது.
இந்நிலையில் மேட்டூர் அணையிலிருந்து நீர்திறப்பு நேற்று காலை 10 மணி முதல் விநாடிக்கு 24,000 கனஅடியிலிருந்து 30,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 22,100 கனஅடியும், 16 கண் மதகு வழியாக 7,900 கனஅடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 119.63 அடியாகவும், நீர் இருப்பு 92.88 டிஎம்சியாகவும் இருந்தது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 20 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 50 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது. நீர்வரத்து உயர்வு காரணமாக ஒகேனக்கல் காவிரியிலும், அருவிகளிலும் குளிக்க, பரிசல் இயக்க தருமபுரி மாவட்ட நிர்வாகம் அறிவித்த தடை தொடர்ந்து அமலில் உள்ளது.