சென்னை: ஜூலை 7-ம் தேதி சுப முகூர்த்த தினம் என்பதால், அன்று பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுப முகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்று பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். தற்போது ஆனி மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான ஜூலை 7-ம் தேதி அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கும்படி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கைள் வந்தன.
அதன் அடிப்படையில், வரும் ஜூலை 7-ம் தேதி ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், 2 சார்-பதிவாளர் உள்ள அலுவகங்களுக்கு 200-க்கு பதில் 300 டோக்கன்கள், அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்கள் மற்றும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.