ராமேசுவரம்: இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தாயகம் திரும்பினர்.
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியிலிருந்து நாட்டுபடகு ஒன்றில் பிரகாஷ், பிரகாசன், சதீஷ், குசலன் ஆகிய 4 பேர் மீன் பிடிக்க கடந்த 25-ம் தேதியன்று கடலுக்கு சென்றனர். அன்று மாலை மீனவர்கள் தலைமன்னார் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது திடீரென வீசிய சூறைக்காற்றால் படகு நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
படகிலிருந்த 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் நால்வரையும் பத்திரமாக மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து இலங்கையிலுள்ள தலைமன்னார் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
4 தமிழக நாட்டுப்படகு மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த மன்னார் நீதிபதி மீனவர்கள் நான்கு பேரும் கடலில் ஏற்பட்ட திடீர் சூறைக் காற்றினால் படகு மூழ்கியதால் இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த போது இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
4 மீனவர்களும் வியாழக்கிழமை மாலை கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு சென்னை வந்தடைந்தனர். தொடர்ந்து மீன்வளத்துறை அலுவலர்கள் மூலம் 4 மீனவர்களும் தனி வாகனம் மூலம் ராமேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அழைத்து வரப்பட்டனர்.