சென்னை: மின்வாரியத்துக்கு டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2021- 23 காலகட்டத்தில் தமிழக மின்வாரியத்துக்கு 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் செய்ய ரூ.1,182 கோடியே 88 லட்சத்துக்கு டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களுக்கு லாபம் கிடைக்கச் செய்து, அதன்மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி இழப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சிறப்பு புலனாய்வு குழு தேவை:அதில், இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கு எதிராக சந்தேகப்படும்படியான ஆதாரங்கள் உள்ளதால் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும், எனக் கோரப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதி பி. வேல்முருகன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மனுதாரர் அளித்துள்ள புகார் மீது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.
அறப்போர் இயக்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், இந்த முறைகேடு குறித்து புகார் அளித்து 2 ஆண்டுகளாகி விட்டன. அனைத்து ஆவணங்களும் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ளன. இந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தொடர்பான வாதங்களை விரிவாக முன்வைக்க வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளி வைக்க வேண்டும், என்றார். அதையடுத்து நீதிபதி, விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டார்.