நேற்றைய இங்கிலாந்து பந்து வீச்சில் ஒருவரையும் குறை கூற முடியாது என்றாலும் சிறந்த முறையில் வீசியவர் யார் என்று தேர்வு செய்யச் சொன்னால் கிறிஸ் வோக்ஸ் என்று சொல்லலாம். 2 விக்கெட்டுகளை அவர் 59 ரன்களுக்கு வீழ்த்தினார்.
ஆனால் அவருக்கு ஓர் ஆதங்கம். ஜெய்ஸ்வாலுக்கும் கருண் நாயருக்கும் எல்.பி.டபிள்யூக்கள் ‘அம்பயர்ஸ் கால்’ ஆகவில்லை எனில் இந்திய அணியின் பாடு திண்டாட்டமாயிருக்கும் எங்கள் பாடு கொண்டாட்டமாயிருக்கும் என்ற தொனியில் சூசகமாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஸ்கை ஸ்போர்ட்ஸில் கூறும்போது, “அந்த இரண்டு விக்கெட்டுகளும் எங்களுக்குச் சாதகமாக அமைந்திருந்தால் அதாவது களநடுவர் எல்.பி. கொடுத்திருந்தால் அம்பயர்ஸ் காலில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் தப்பியிருக்க முடியாது. 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்றால் எங்களுக்குச் சாதகமாக டெஸ்ட் இன்னும் வலுப்பட்டிருக்கும். முதல் நாளே வேறு மாதிரி அமைந்திருக்கும்.
நாங்கள் எங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்தோம், உணவு இடைவேளைக்குப் பிறகு பிட்ச் ஃபிளாட்டாக மாறி விட்டது. கடைசி செஷனில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தால் இந்திய டெய்ல் எண்டர்களை விரைவில் வீட்டுக்கு அனுப்பியிருப்போம். ஆனால் ஷுப்மன் கில், ஜடேஜா நன்றாக ஆடினார்கள்.
ஆனால் ஜெய்ஸ்வால், கருண் நாயர் தப்பித்த எல்.பி.தீர்ப்புகள் கொஞ்சம் கஷ்டம் தான். நடுவர்கள் தீர்ப்பு எப்போதும் சாதகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அம்பயர்ஸ் கால் என்ற ஒன்று காரணமாகத்தான் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில வேளைகளில் இது போன்ற அவுட் மறுப்புகள் வெறுப்பூட்டுகின்றன. ஒரு வேளை அந்தத் தீர்ப்புகள் எங்களுக்குச் சாதகமாக இருந்திருந்தால் 30 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இந்தியா இழந்திருந்தால் மிடில் ஆர்டர் புதிய பந்தில் சிக்கியிருப்பார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்பது இப்படித்தான் இருக்கும்…” என்றார்.
நாசர் ஹுசைன் கூறும்போது, “இந்தியா மீதே அனைத்துக் கண்களும் உள்ளன. லீட்ஸ் பிட்சிலேயே இரண்டு இன்னிங்ஸ்களிலும் சொற்ப ரன்களுக்கு கடைசி 7 விக்கெட்டையும், 6 விக்கெட்டையும் பறிகொடுத்த இந்திய அணி 2-ம் நாளில் அதே போல் இந்த சாலை போன்ற பிட்சில் பறிகொடுக்கும் என்று நம்புவதற்கில்லை.
அவர்கள் அதை மாற்றியிருக்கிறார்கள். பேட்டிங் ஆல்ரவுண்டர் நிதிஷ் குமாரைத் தேர்வு செய்தார்கள், ஆனால் அவர் ஆட்டமிழந்து விட்டார். வாஷிங்டன் சுந்தர் நன்றாக ஆடக்கூடியவர், இந்திய அணி 450 ரன்கள் இலக்கை எட்டக்கூடும். ஹெடிங்லே தவறுகளுக்கு இங்கு ஈடுகட்டுவார்களா என்பதைப் பார்க்க என் பார்வை இந்திய அணி மீதுதான் 2ம் நாளில் இருக்கும்.” என்றார்.
ரவி சாஸ்திரி கூறும்போது, “முதல் செஷனில் இந்தியா ஆதிக்கம் செலுத்த வேண்டும். அதிகபட்சம் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்திருக்க வேண்டும். ஆனால் 2 விக்கெட்டுகளை முதல் ஒருமணி நேரத்தில் வீழ்த்தி இந்தியாவைக் கட்டுப்படுத்தவே இங்கிலாந்து முயற்சிக்கும்” என்றார்.