சென்னை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில், இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் வரும் 6-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், தமிழக அரசை கண்டித்தும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (3-ம் தேதி) காலை 10 மணிக்கு எழும்பூர், ராஜரத்தினம் மைதானம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் நடைபெறும் நாள் மற்றும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோயில் காவலர் அஜித்குமார் மரணத்துக்கு நீதி கேட்டும், உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த 4 ஆண்டுகளில் 24 பேர் காவல் நிலையத்தில் மரணம் அடைந்தது குறித்து உயர் நீதிமன்றமே அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், தவெக தலைவர் விஜய் உத்தரவின் பேரில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்கெனவே அனுமதி கோரப்பட்ட இடம் அன்றைய தேதியில் வேறு காரணத்துக்குப் பயன்படுத்தப்பட இருப்பதாகக் கூறி, காவல் துறையால் மாற்று இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, சிவானந்தா சாலையில் வரும் 6-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்குக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.