மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மரத்வாடா பகுதியில் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. கூலித் தொழிலாளர்களை நியமிக்கவும் முடியாத வறுமை நிலை.
இதனால் வேறு வழியில்லாமல், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி விவசாயிகள் படும் கஷ்டத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து முக்தாபாய் கூறுகையில், “எங்களது மகன் நகரத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறான். வயதான நாங்கள்தான் உழவு முதல் அறுவடை வரை அனைத்து விவசாய வேலைகளையும் செய்து வருகிறோம். கடந்த இரண்டு வருடங்களாக பெய்த கனமழையால் பயிர் சேதமடைந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்’’ என்றார்.