ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள சிகாச்சி ரசாயன தொழிற்சாலையில் கடந்த திங்கட்கிழமை காலை திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. 33 பேர் காயத்துடன் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இறந்தவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்குவதாக சிகாச்சி தொழிற்சாலை செயலாளர் விவேக் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து ரியாக்டர் வெடித்ததால் இல்லை. நாசவேலை கூட காரணமாக இருக்கலாம் என்று விவேக் கூறியுள்ளார். இதையடுத்து விபத்து குறித்து தலைமை ரசாயன நிபுணர் பிரதாப் குமார் தலைமையில் ஓய்வு பெற்ற ரசாயன நிபுணர் சூர்ய நாராயணா, பூனாவை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி சந்தோஷ் கோகே ஆகிய 3 பேரை தெலங்கானா அரசு விசாரணைக்காக நியமனம் செய்துள்ளது. மேலும் சிகாச்சி ரசாயன நிறுவனம் 3 மாதம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.