சென்னை: ‘பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவு அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்?’ என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று (ஜூலை 2) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில், உத்தரவை அமல்படுத்தியது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகம் முழுவதும் 19 மாவட்டங்களில், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கொடிக் கம்பங்கள் 100 சதவீதம் அகற்றப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 90 சதவீதத்துக்கும் மேல் கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து அரசு தரப்பு வழக்கறிஞர், “பொது இடங்களில் அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டங்களுக்கு வாடகை வசூலித்தது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், மற்ற இடங்களில் கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நான்கு வார கால அவகாசம் வழங்க வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “சென்னையில் 31 சதவீதம் கொடி கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளது ஏன்? சென்னையில் உயர் நீதிமன்ற உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது? சாலையின் நடுவே உள்ள தடுப்புகளில் கொடிக் கம்பங்கள் நடுவதற்கு அரசு ஏன் அனுமதி அளிக்கிறது? இது அபாயகரமானது. மனித உயிர்களுக்கு உரிய மதிப்பு அளிக்க மாட்டீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, தமிழகத்தில் 19 மாவட்டங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று சுட்டிக் காட்டிய நீதிபதி, அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உத்தரவை அமல்படுத்துவதற்கு ஜூலை 24-ம் தேதி வரை அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தார். மேலும், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை முழுமையாக அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார்.