புதுடெல்லி: டிஜிட்டல் இந்தியா திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இத்திட்டம் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டம் வெற்றிகரமாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பத்து ஆண்டுகளுக்கு முன், இந்தியா மிகுந்த நம்பிக்கையுடன் அறியப்படாத பிரதேசத்தில் ஒரு துணிச்சலான பயணத்தை தொடங்கியது.
தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் இந்தியர்களின் திறனை சந்தேகித்து பல தசாப்தங்கள் கழிந்தாலும், நாங்கள் இந்த அணுகுமுறையை மாற்றி, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் இந்தியர்களின் திறனை நம்பினோம், இதுபோலவே சமத்துவமின்மையை தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.
இத்திட்டம் தற்போது இருப்பவர் – இல்லாதவர் இடையிலான இடைவெளியை போக்கும் பாலமாக திகழ்கிறது. நோக்கம் சரியாக இருக்கும்போது குறைந்த அதிகாரம் கொண்டவர்களுக்கு அதிகாரம் அளிப்பதாக புதுமை திகழ்கிறது. அனைவருக்குமான அணுகுமுறைகள் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள மாற்றங்களை கொண்டு வந்துள்ளன.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தின் 11 மடங்கு தூரத்துக்கு சமமான 42 லட்சம் கி.மீட்டருக்கும் அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள், தற்போது மிகவும் தொலைதூர கிராமங்களையும் இணைக்கிறது. இந்தியாவின் 5ஜி திட்டம் உலகில் வேகமான திட்டங்களில் ஒன்றாகும். இத்திட்டத்தில் 2 ஆண்டுகளில் 4.81 லட்சம் அடிப்படை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அதிவேக இணையம் நகர்ப்புற மக்களை மட்டுமல்ல, கல்வான் பள்ளத்தாக்கு, சியாச்சின், லடாக் உள்ளிட்ட ராணுவ நிலைகளையும் அடைந்துள்ளது.
இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பின் கீழ் இருக்கும் தளங்களான ஆதார், கோ-வின், டிஜி-லாக்கர், பாஸ்ட்-டேக், பிஎம். வாணி, ஒன் நேஷன் ஒன் சப்ஸ்கிரிப்ஷன் ஆகியவை இப்போது உலகளவில் ஆய்வு செய்யப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை கோ-வின் செயல்படுத்தி, 220 கோடிக்கும் அதிகமான சான்றிதழ்களை வழங்கியது. டிஜி-லாக்கர் இப்போது 54 கோடி பயனர்களுக்கு சேவை செய்கிறது.
775 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை வழங்குகிறது. டிஜிட்டல் இந்தியா ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது, மேலும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கும், புதுமை கண்டுபிடிப்புகளில் இந்தியாவை உலகின் நம்பகமான கூட்டாளியாக மாற்றுவதற்குமான மையமாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நிர்மலா சீதாராமன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘டிஜிட்டல் இந்தியா வெறும் அரசுத் திட்டமாக மட்டும் திகழவில்லை. மாறாக மக்கள் இயக்கமாகவும் மாறியுள்ளது. நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கு இணைய வசதியை கொண்டு செல்வது முதல், அரசு சேவைகளை ஆன்லைனில் கிடைக்கச் செய்வது வரை, பிரதமர் மோடி அரசின் ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் நாடு முழுவதும் உள்ள டிஜிட்டல் இடைவெளியை உண்மையிலேயே குறைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தனது பதிவில், ‘‘யுபிஐ, நேரடிப் பணப்பரிமாற்றம் போன்ற பல முயற்சிகளால், நாடு டிஜிட்டல் நிர்வாகத்தில் இருந்து உலகளாவிய டிஜிட்டல் தலைமையை நோக்கி நகர்கிறது’’ என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது பதிவில், “மின்னணு தேசிய வேளாண் சந்தை (eNAM) மூலம் விவசாயத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது நாடு முழுவதும் நுகர்வோர், விவசாயிகள் நேரடியாக இணைய உதவுகிறது. 1,400-க்கும் மேற்பட்ட மண்டிகளில் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் மற்றும் 1.7 கோடி விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதன் மூலம், இதன் தாக்கம் நிதர்சனமானது” என்று கூறியுள்ளார்.