புதுடெல்லி: பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரிவாலா (42) சில தினங்களுக்கு முன்பு மும்பையில் மாரடைப்பால் உயிரிழந்தார். இதுகுறித்து யோகா குரு பாபா ராம்தேவ் கூறியதாவது: மனிதர்களின் இயற்கையான ஆயுட்காலம் 150 முதல் 200 ஆண்டுகளாகும். உணவுமுறை, எண்ணங்கள், உடல் அமைப்பு சரியாக இருந்தால் 100 ஆண்டுகளுக்கு மேலும் வாழலாம்.
ஆனால் நாம் 100 ஆண்டுகளில் சாப்பிட வேண்டிய உணவை, 25 ஆண்டுகளிலேயே சாப்பிட்டு விடுகிறோம். மேலும், மூளை, இதயம், கண்கள், கல்லீரல் போன்ற உறுப்புகளுக்கு அதிக வேலை கொடுக்கிறோம். இதனால் இளம் வயதிலேயே மரணம் வந்துவிடுகிறது.
எனக்கு தற்போது 60 வயதுக்கு மேல் ஆகிறது. ஆனால் யோகா, உணவுமுறை, நடத்தையால் சிறந்த ஆரோக்கியமான, வாழ்க்கையை வாழ்கிறேன். இதனால் நான் ஆரோக்கியமாகவும், முழு ஆற்றலுடனும் இருக்கிறேன். நடிகை ஷெபாலி 42 வயதிலேயே இறந்துவிட்டார். அவரது உடலில் உள்ள `ஹார்ட்வேர்’ நன்றாக இருந்தது.
ஆனால் `சாப்ட்வேர்’ பழுதாகிவிட்டது. நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் இயற்கையான ஆயுட்காலம் உண்டு. அதில் தலையிடும்போது, அது உடலுக்குள் பேரழிவுகளை ஏற்படுத்தி, மாரடைப்பு போன்ற சூழ்நிலைகளுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.