புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரே ஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு, இந்திய எல்லைகளை கண்காணிக்க 52 செயற்கைக் கோள்களை ஏவும் பணியைதீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காஷ்மீரில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மத்திய அரசு நடத்தியது. இந்நிலையில், இந்திய எல்லைகள் மற்றும் எதிரி நாடுகளின் நிலப்பரப்புகளை தொடர்ந்து கண்காணிக்க 52 கண்காணிப்பு செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
இந்த திட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டே முடிவு செய்தது. மேலும், ராணுவத்துக்காக மட்டும் பிரத்யேகமாக விண்வெளி கொள்கையை கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி விண்ணில் இருந்து கண்காணிக்கும். 3-ம் கட்ட திட்டத்துக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ரூ.26,968 கோடி: இத்திட்டம் ரூ.26,968 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 21 செயற்கைக் கோள்கள் தயாரிப்பு மற்றும் விண்ணில் ஏவும் பணியை இஸ்ரோவும், 31 செயற்கைக் கோள்கள் மற்றும் விண்ணில் ஏவும் பணியை தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ளும்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முதல் கட்டமாக சில கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்படும். வரும் 2029-ம் ஆண்டுக்குள் மொத்தம் 52 செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்பட்டு விடும். இதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. மேலும், செயற்கைக் கோள் ஏவும் ஒப்பந்தத்தைப் பெற்றுள்ள 3 தனியார் நிறுவனங்கள், தங்கள் பணிகளை விரைவுப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்திய கண்காணிப்பு செயற்கைக் கோள்கள் விண்ணில் ஏவப்பட்ட பிறகு, சீனா, பாகிஸ்தானின் நிலப்பரப்பு மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளை தொடர்ந்து 24 மணி நேரமும் துல்லியமாக கண்காணிக்க முடியும். பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது, இந்தியாவின் கார்டோசேட் செயற்கைக் கோள் மிக முக்கிய பங்கு வகித்தது. பாகிஸ்தானில் ராணுவத்தின் நடமாட்டங்களை இந்த செயற்கைக்கோள் கண்டறிந்து இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.