சேலம்: வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி, சேலத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், அன்புமணி குறித்து தவறாகப் பேசி வருவது கண்டனத்துக்குரியது.
அன்புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்ளது? பாமக உட்கட்சி விவகாரம் சரியாகி விடக்கூடாது என்பதற்காக அருள் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். அன்புமணி குறித்து இனியும் தவறாகப் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சியை உடைக்கும் நோக்கில் எம்எல்ஏ அருள் செயல்படுகிறார்.ராமதாஸ் அருகில் இருக்கும் சிலர் திட்டமிட்டு சதி செய்கின்றனர். பாமக தலைவராக அன்புமணி 3 ஆண்டுகள் இருந்தபோதும்கூட, 3 மாதங்கள் மட்டுமே நியமனக் கடிதங்களில் அவரது கையெழுத்து இருந்தது. அதிகாரத்தை மீறி நிறுவனரின் கையெழுத்துதான் இடம் பெற்றது.
ராமதாஸுடன் இருக்கும் 4 பேர் பிரச்சினையை தீர்த்து விடுவார்களா என்று தெரியவில்லை. கட்சித் தலைவரை மாற்றுவது குறித்து 108 மாவட்டச் செயலாளர்களை அழைத்து ராமதாஸ் ஏன் கருத்து கேட்கவில்லை? இவ்வாறு அவர் கூறினார்.