மதுரையில் இந்து முன்னணி நடத்திய முருக பக்தர்கள் மாநாடு பெரும் வெற்றிபெற்றதாக இந்து முன்னணி மற்றும் பாஜக தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்ற மாநாடுகள் இனி நடத்தப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், தமிழக பாஜக துணை தலைவரும். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆர்ஈசி லிமிட்டெட்டின் (ஊரக மின்வசதியாக்கக் கழகம்) இயக்குநருமான நாராயணன் திருப்பதி ‘இந்து தமிழ் திசை’க்காக அளித்த பிரத்யேக பேட்டி இது.
பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்பார்த்த அளவுக்கு மதுரை முருக பக்தர்கள் மாநாடு வெற்றிபெற்றதா?
இறைப் பணியில் வெற்றி தோல்வி என்பதே இல்லை. மக்கள் எழுச்சியையும் ஒற்றுமையையும் காண முடிந்தது.
இந்துக்களின் ஆன்மிக உணர்வுகளை ஒருமுகப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டால் பாஜக-வுக்கு ஆதாயம் கிடைக்குமா?
ஆதாயத்துக்காக நடத்தப்பட்ட மாநாடு அல்ல. சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற, பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளை சிதைக்கும் சில அரசியல் கட்சிகளுக்கு இந்து ஒற்றுமை என்றால் என்ன என்பதை இந்த மாநாடு காட்டி இருக்கிறது. அது ஆதாயம் என்றால் அப்படியே ஆகட்டும்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமில்லை என பாஜக கூட்டணி கட்சியான அதிமுக தெரிவித்திருக்கிறதே..?
இது பாஜக-வின் மாநாடு அல்ல… இந்து முன்னணி நடத்திய மாநாடு.
மாநாட்டில் வீடியோ வெளியிட்டு அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்திவிட்டதாக அதிமுக ஆதங்கப்பட்டிருகிறதே..?
மறைந்த தமிழக தலைவர்கள் யாரையும் சிறுமைப்படுத்தியதாக தெரியவில்லை.
தமிழகத்தில் முருகனை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யும் பாஜக, அயோத்தி ராமர் கோயிலில் முருகனுக்கு சன்னிதி அமைக்காதது ஏன் என எழும் விமர்சனங்கள் குறித்து..?
கடவுளை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டிய அவசியம் பாஜக-வுக்கு இல்லை. முருகர் கோயிலில் ராமருக்கு சன்னிதி இல்லை. உருவ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது புரியும்.
நடிகர் விஜய்யை இயக்குவதே பாஜக தான் என்ற வாதம் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
அப்படியா? எனக் கேட்டுக் கொள்கிறேன்.
திமுக-வை வீழ்த்த எந்த எல்லைக்கும் போவேன் என்கிறார் விஜய். அவரை பாஜக கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடப்பதாக சொல்வது உண்மையா?
திமுக-வை வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஓரணியில் சேர வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம். அதைத் தான் விஜய்யும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
பெரியார், அண்ணாவை அவமதித்தவர்கள் தமிழக அரசியலில் தலையெடுத்ததில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சொல்லி இருக்கிறாரே..?
ஈவெரா வை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் கருணாநிதி. அண்ணாவின் நம்பிக்கை நட்சத்திரம் எம்ஜிஆரை அவமானப்படுத்தியது திமுக. எனவே, பெரியார், அண்ணாவைப் பற்றி பேச திமுக-வுக்கு தகுதியில்லை.
மதுரை மாநாட்டில், முருகனுக்கு ஆபத்து எனச் சொல்லி இருக்கிறதே பாஜக… அதை விளக்கமாகச் சொல்ல முடியுமா?
பண்பாட்டு ரீதியாக, ஆன்மிக ரீதியாக தமிழர்களை ஒருங்கிணைக்கும் கடவுள் முருகனை, ஓட்டுக்காக இழிவுபடுத்தும் அரசியல் கட்சிகளால் புனிதமான திருப்பரங்குன்றம் முருகனுக்கு நேர்ந்த அவமதிப்பையும் முருக பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் தான் அப்படி குறிப்பிட்டிருக்கிறோம்.
முருக பக்தர்கள் மாநாட்டில் முஸ்லிம்கள் மீது வெறுப்பை தூண்டும் விதமாக பேசி இருக்கிறாரே ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்… இதனால், பாஜக-வுக்கு சிறிதளவேனும் இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு சேதாரம் ஏற்படாதா?
இஸ்லாம் வேறு… இஸ்லாமிய அடிப்படைவாதம் வேறு.
முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமா பாஜக?
சாதி, மத அடிப்படையில் தேர்தல்களை நாம் சந்திப்பதில்லை.
இந்திய தொல்லியல் ஆய்வகம் கீழடி அகழாய்வு அறிக்கையில் சந்தேகம் எழுப்பி இருப்பது பாஜக-வுக்கு பாதிப்பை உண்டாக்காதா?
இந்திய தொல்லியல் துறையால் தான் தமிழகத்தின் பல்வேறு நாகரிக, வரலாற்று பண்பாட்டு அடையாளங்கள் வெளிப்பட்டிருக்கின்றன.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போதுதான் கட்டிமுடித்துத் திறப்பீர்கள்?
ஜப்பான் நிதி நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டு கொண்டிருக்கிற மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மிக விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அதன் கட்டுமானத்தை பார்வையிட தமிழக முதல்வர் தயங்குவது ஏன்?
தமிழகத்தில் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று சீமான் சொல்லி இருக்கிறார்… இதே கருத்தை முன்பு அண்ணாமலையும் தெரிவித்திருந்தார். உண்மையில் பாஜக இதை ஆதரிக்கிறதா?
கடந்த 20 வருடங்களாக அனைத்துத் தேர்தல்களிலும் இதை தேர்தல் வாக்குறுதியாக அளித்து வருகிறோம்.
பாமக-வில் நடக்கும் சண்டைக்கு காரணம் திமுக என்கிறார் அன்புமணி. பாஜக உடன் கூட்டணி வேண்டாம் என்று ராமதாஸ் சொல்வதால் தான் பிரச்சினை என்கிறார்கள். இதில் எது உண்மை?
மற்றொரு கட்சியின் உள்விவகாரங்களில் பாஜக தலையிடாது; கருத்தும் சொல்லாது.
பாமக பஞ்சாயத்தை முடிவுக்கு கொண்டுவர ஆடிட்டர் குருமூர்த்தி மூலமாக பாஜக முயற்சி எடுத்தது உண்மைதானே..?
பாஜக அவசியம் இல்லாத விவகாரங்களில் தலையிடுவதில்லை.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை விட்டு விலகிய தேமுதிக மீண்டும் உங்களிடம் வரும் என எதிர்பார்க்கிறீர்களா?
உறுதியாக வந்து விடும் என நம்புகிறோம்.
திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கில் தமிழிலும் மந்திரங்கள் ஓதப்படும் என அரசு கூறியிருப்பதற்கு பாஜக-வின் ரியாக் ஷன் என்ன?
தாராளமாக… இதில் என்ன தவறு?
உலகின் மிகப் பழமையான மொழி தமிழ் என பிரதமர் மோடி சொல்லி வருகையில், தமிழுக்கு ஒதுக்குவதை விட பல மடங்கு கூடுதலான நிதியை சம்ஸ்கிருதத்துக்கு ஒதுக்குவது சரியா?
இந்தியா தனது நிர்வாக வசதிக்காக மொழி ரீதியாக மாநிலங்களை பிரித்துக் கொண்டது. அந்தந்த மாநிலங்கள் தங்கள் மொழியை செவ்வனே வளர்க்கும். ஆனால், சம்ஸ்கிருதம் எந்த மாநில மக்களுக்கும் தாய் மொழியல்ல. அதை வளர்க்க வேண்டிய கடமையும் பொறுப்பும் மத்திய அரசுக்கு உள்ளது. திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் அரசிலும் இதே நிலைப்பாடு தான். அதேசமயம், இதுவரையிலும் இந்திய பிரதமர்களாக இருந்தவர்களில் அதிகமாகத் தமிழை போற்றி உலகளவில் எடுத்துச் சென்றது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மட்டுமே.
தமிழ்நாடு அரசின் கீழ் தஞ்சை தமிழ் பல்கலைகழகம், உலக தமிழராய்ச்சி நிறுவனம் மற்றும் மதுரை தமிழ்ச் சங்கம் ஆகிய மூன்று ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த மூன்றுக்கும் சேர்த்து தமிழ்நாடு அரசு ஒதுக்கும் நிதியுடன் ஒப்பிட்டால் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு மட்டும் மத்திய அரசு 2025-ல் ஒதுக்கி இருக்கும் ரூ.17 கோடி என்பது அதிகமே.
மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி ஏற்பட்ட பிறகும் அதிமுக தலைவர்களை அண்ணாமலை விமர்சிப்பது நிற்கவில்லையே?
அவர் அப்படி எதுவும் விமர்சிக்கவில்லை. இது எதிர்கட்சிகளின் தவறான பிரச்சாரம்.
தெளிவாகச் சொல்லுங்கள்… 2026-ல் தமிழகத்தில் என்டிஏ கூட்டணி ஆட்சியா… என்டிஏ கூட்டணியின் ஆட்சியா?
அதிமுக தலைமையிலான கூட்டணி திமுக-வை வீழ்த்தி வெற்றி பெறும். தமிழகத்தில் ஆட்சியமைக்கும்.
ஆனால், இந்த விஷயத்தில் அதிமுக-வும் பாஜக-வும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற கணக்கில் பூடகமாகவே பதிலளித்து வருகின்றனவே?
தேவையில்லாத கேள்விகளுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை தானே.
கூட்டணி ஆட்சி தான் என அழுத்தம் கொடுத்தால் கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறிவிடும் என்பதால் பாஜக-வும் இந்த விஷயத்தில் இப்போதைக்கு அடக்கி வாசிக்கிறதோ?
இந்த கேள்வி திமுக கூட்டணிக்கும் பொருந்தும் தானே? ஆனால், அதன் தலைவர்களிடம் கேட்கப்படுவதில்லையே… ஏன்?
வைகோ-வுக்கு மீண்டும் திமுக ராஜ்யசபா சீட் கொடுக்காததை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திமுக-விடமே கேட்கப்பட வேண்டிய கேள்வி.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேசி வருவதாக சொல்கிறாரே மத்திய அமைச்சர் எல்.முருகன்… அது மதிமுக என்பது உண்மையா?
ரகசியங்கள் வெளியில் சொல்வதற்கில்லை.
அண்ணாமலை தலைவராக இருந்த போது தமிழக பாஜக-வுக்கு இருந்த துடிப்பு இப்போது இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?
பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது.
தமிழக பாஜக-வுக்கு ஒரு பரபரப்பு முகம் கொடுத்த அண்ணாமலையை பாஜக உரிய முறையில் பயன்படுத்தவில்லையோ?
பாஜக, தொண்டர்களின் கட்சி. அண்ணாமலை அவர்கள் பாஜக-வுக்கு கிடைத்த மாணிக்கம்.
தேர்தல் நெருங்க நெருங்க அமலாக்கத்துறையும் வருமான வரித்துறையும் திமுக-வை இன்னும் கூடுதலாக நெருக்கும் என்கிறார்களே..?
தேர்தல் நெருங்க நெருங்க, திமுக சட்ட விரோதமாக வருவாய் ஈட்டினால் அந்த துறைகளின் அமைப்புகள் நெருக்க வாய்ப்பிருக்கிறது. அந்த அமைப்புகளுக்கு தேர்தல் காலம், அது இல்லாத காலம் என்றெல்லாம் ஒன்று இல்லை.
ஐம்பது தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தயார்படுத்துங்கள் என அமித் ஷா சொன்னதாக செய்திகள் வெளியானதே… அப்படியானால், அதிமுக-விடம் ஐம்பது தொகுதிகளை கேட்கப் போகிறதா பாஜக?
யூகங்களுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்.
மக்களவைத் தேர்தலில் பாஜக-வுக்கு தோள் கொடுத்த தினகரனையும், ஓபிஎஸ்ஸையும் பாஜக இப்போது அதிமுக-வுக்காக ஒதுக்கி வைத்திருப்பது போலத்தானே தெரிகிறது?
கண்ணால் காண்பதும் பொய்… காதால் கேட்பதும் பொய்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் எல்லாம் இம்முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்போம் என, பேசி வைத்தாற்போல் சொல்லி வருவதை கவனித்தீர்களா?
சில பல கோடிகளுக்காகப் பேரம் பேசுகின்றன எனக் கருதுகிறேன்.