சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில காப்பாளர் வி.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.தனசேகர், மாநில இணை செயலாளர் தாம்பரம் இரா.ரமேஷ் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து பல கோயில்களில் பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
வீட்டு வாடகைப்படி: கூட்டத்தில், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஹெச்.ஆர்.ஏ. வீட்டு வாடகைப்படி மற்றும் சி.சி.ஏ நகர ஈட்டுபடி உயர்த்தி வழங்க வேண்டும். கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி அடிப்படையில் பணிப்புரியும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போல் கோயில் பணியாளர்களுக்கும் மையநிதி ஏற்படுத்தி சம்பளம் மற்றும் இதர சலுகைகள் வழங்க வேண்டும். கோயில் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு “பசலி” முடிந்த பிறகு 2 மாத காலம் அவகாசம் தரவேண்டும்.
பணியாளர்களை முழு நேர அரசு ஊழியராக்க வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை தீர்மானமாக நிறை வேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானங்களை முன்வைத்து அறநிலைத்துறையின் கவனத்தை ஈர்க்கும் வகையில் விரைவில் மாபெரும் மாநாடு அல்லது போராட்டம் நடத்துவது குறித்து செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.