சென்னை: தியாகங்கள் புரிந்த தீரர்கள், அறிஞர்கள், தலைவர்களை போற்றி 4 ஆண்டுகளில் 63 சிலைகள், 11 மணி மண்டபங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆற்றிய பணிகளில் சிறந்த பணி, பல்லாயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் தனித்தோங்கி நிற்கும் பணி, தென்கோடி குமரி முனையில் திருவள்ளுவருக்கு உலகமே கண்டு வியக்கும் வண்ணம் 133 அடி உயரத்தில் 7,000 டன் எடை கொண்ட மாபெரும் கற்சிலையை ரூ.9 கோடியே 65 லட்சத்தில் நிறுவி 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி திறந்து வைத்தார்.
திருவள்ளுவர் சிலை போல எண்ணற்ற சிலைகள் மற்றும் மணிமண்டபங்கள் நிறுவி தியாகிகளை போற்றியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குமரி முனையில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் வெள்ளி விழாவை 2024-ம் ஆண்டு டிசம்பர் 30, 31-ம் தேதிகளில் மாபெரும் கலை விழாவாக கொண்டாடினார். திருவள்ளுவர் சிலையை, பேரறிவுச் சிலை என முதல்வர் போற்றி மகிழ்ந்தார்.
அறிஞர் பெருமக்களின் எழுத்தாவணங்களை தொகுத்து வெள்ளி விழா மலர் ஒன்றையும் வெளியிட்டார். திருவள்ளுவரின் சிலையையும் விவேகானந்தர் பாறையையும் இணைத்து ரூ. 37 கோடி செலவில் இந்தியாவிலேயே முதலாவதாகக் கடல் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான கண்ணாடி இழைப் பாலத்தை 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி திறந்து வைத்தார்.
கருணாநிதி வழியில், ஆட்சியை பார் முழுதும் பாராட்டும் வண்ணம் நடத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியத் திருநாட்டின் எழுச்சிக்கு விதையாக வித்தாக அமைந்த சுதந்திர போராட்ட தியாகிகள், அன்னை தமிழ் மொழியை காத்திட ஆருயிர்கள் தந்து போராடிய அற்புத தியாகிகள் அனைவரையும் போற்றி பாராட்டும் பெருமைக்குரிய சின்னங்களாக சிலைகளையும், மணிமண்டபங்களையும் தமிழகம் முழுவதிலும் ஏராளமாக ஏற்படுத்தி வருகிறார். இவை அனைத்தும் எதிர்காலத் தலைமுறை இளைஞர்களுக்கு நல்வழி காட்டி உணர்வூட்டும் உயிரோவியங்களாகும்.
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாளில் இருந்து இதுநாள் வரை நாட்டுக்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட பெருமக்களின் தியாகங்களை வருங்கால இளைஞர்கள் அறிந்து போற்றி பின்பற்றும் வண்ணம் 63 சிலைகள், 11 மணிமண்டபங்களை அமைத்ததுடன் மேலும் 28 தியாகிகளுக்கு சிலைகளும் 12 அரங்கங்களும் அமைத்து வருகிறார்கள்.
ஆனால் அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் 25 தியாகிகளுக்கான சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டன என்பது நினைவுகூரத்தக்கது. இந்த விவரங்கள், இந்திய நாட்டுக்கே வழி காட்டும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாட்டுக்கு உழைத்த நல்லோரை எல்லாம் போற்றி வரும் மாட்சிகளை எடுத்துரைக்கும் சிறந்த சாட்சிகள் ஆகும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.