சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று (ஜூன் 30) முதல் திறக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 7 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பங்கேற்க 2 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர்.முதல்கட்டமாக சிறப்புப் பிரிவுக்கான கலந்தாய்வும், தொடர்ந்து பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வும் நிறைவடைந்தது.
இதையடுத்து, அரசுக் கல்லூரிகளில் முதல்கட்ட கலந்தாய்வின்போது நிரம்பாத இடங்களை நிரப்புவதற்கான 2-ம்கட்ட சேர்க்கைப் பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கலை, அறிவியல் படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு ஜூன் 30-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக்கல்வி இயக்குநரகம் அறிவித்திருந்தது.
அதன்படி முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று(ஜூன் 30) தொடங்கப்பட உள்ளன. இதையடுத்து மாணவர்களை வரவேற்க அரசுக் கல்லூரிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. மேலும், ராகிங் போன்ற சம்பவங்கள் நடைபெறாதவாறு கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.