சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ் அனுப்பியது குறித்து திமுக தரப்பில் விவரம் தெரிந்தவர்கள் கவலையுடன் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சன் நெட்வொர்க் நிறுவனம், விமான சேவை, சினிமா, விளையாட்டு, பத்திரிகை உள்ளிட்ட பல துறைகளிலும் கால்பதித்து கோலோச்சி வருகிறது. இத்தனைக்குமான ஆதாரப் புள்ளி கருணாநிதியின் மனைவி தயாளு அமமாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன் ஆகியோரால் 1985 டிசம்பர் 12-ல் தொடங்கப்பட்ட சுமங்கலி கேபிள் நிறுவனம் தான். இதன் அடுத்தகட்ட வளர்ச்சியாக தான் 1993 ஏப்ரல் 14-ல் சன் டிவி தொடங்கப்பட்டது.
முரசொலி மாறன் இருந்தவரை எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருந்த நிலையில், அவரது மறைவுக்குப் பிறகுதான் கலாநிதி மாறன் சட்டவிரோதமாக சன் நெட்வொர்க்கின் பங்குகளை தனது பெயருக்கு மாற்றிக் கொண்டதாக இப்போது தெரிவித்துள்ள தயாநிதி மாறன், “அப்பா இறந்த போதே, ‘சொத்துப் பரிவர்த்தனைகள் தொடர்பாக ஏதும் செய்துவைத்திருக்கிறீர்களா?’ என தாத்தா (கருணாநிதி) கேட்டார். அதற்கு, ‘அப்பா இருந்தால் என்ன செய்வாரோ அதை கலாநிதி முறையாகச் செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’ என்று சொன்னேன்” என்று கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் அண்ணன் – தம்பிக்கு இடையில் இப்போது வெடித்திருக்கும் இந்த பிரச்சினையின் அண்மை நிலவரத்தை அறிந்த திமுக-வினர், “கலாநிதி தான் சன் நெட்வொர்க் நிறுவனத்தை இந்தளவுக்கு வளர்த்திருக்கிறார் என்றாலும் அதில் தயாநிதியின் பங்கும் இருக்கிறது. அவரது சப்போர்ட் இருந்ததால் தான் பிற மாநிலங்களிலும் சேனல்களை தொடங்க முடிந்தது. அதற்காக அவர் பாதிக்குப் பாதி கேட்கவில்லை. மொத்த சொத்து மதிப்பில் மூன்றில் ஒரு பங்கை தந்தால் போதும் என்றுதான் கேட்கிறார். ஆனால் கலாநிதி தரப்பில், அதற்கு உடன்படவில்லை எனச் சொல்கிறார்கள்.
கலைஞர் இருந்த போது குடும்பத்துக்குள் என்ன பிரச்சினை வெடித்தாலும் அதை அத்தனை எளிதாக வெளியில் விடமாட்டார். அவரது கையை மீறிப் போன விஷயம் என்றால், அழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தான். அழகிரி பற்றிய கருத்துக் கணிப்பை தினகரனில் போட வேண்டாம் என்று கலைஞர் சொன்னதையும் கேட்காமல், கருத்துக் கணிப்பை வெளியிட்டதால் அழகிரி ஆதரவாளர்கள் மதுரையில் தினகரன் அலுவலகத்தையே தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, மாறன் சகோதரர்களை ஒதுக்கிவைத்த கலைஞர், அறிவாலயத்தை விட்டு சன் டிவி அலுவலகத்தையும் வெளியேற்றினார். அதையடுத்து தான் 2007-ல் ‘கலைஞர் டிவி’-யை ஆரம்பித்தார் தலைவர். அப்போது, ‘திடீரென டிவி சேனல் தொடங்க எங்கிருந்து வந்தது பணம்?’ என எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். ‘சன் டிவி-யில் இருந்த எனது மனைவி தயாளுவின் 20 சதவீத பங்குகளை விட்டுக் கொடுத்ததில் 100 கோடி ரூபாய் வந்தது. அதில் தான் சேனல் தொடங்கப்பட்டது’ என்று சொன்னார் கலைஞர்.
மாறன் சகோதரர்களை ஒதுக்கி வைத்த கலைஞர் பிரச்சினையின் தாக்கம் தணிந்ததும், ‘கண்கள் பனித்தது… இதயம் இனித்தது’ என்று சொல்லி அவர்களை மீண்டும் அரவணைத்துக் கொண்டார். இப்போது கலைஞரின் இடத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார். அதனால் தான் விவகாரத்தை அவரது கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார் தயாநிதி மாறன். திமுக-வின் வளர்ச்சிக்கு சன் டிவி-யும் சன் டிவி-யின் வளர்ச்சிக்கு திமுக-வும் பக்கபலம் என்பதை மறுப்பதற்கில்லை. திமுக குடும்பத்துக்குள் வாரிசு சண்டை வெடிக்காதா என எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் கலாநிதி மாறனுக்கு ஆதரவாகப் பேசுவது போல் அண்ணாமலை பேசி இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
2ஜி வழக்கை வைத்து கலைஞர் டிவி-க்கு என்னவெல்லாம் குடைச்சல் கொடுத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேர்தல் சமயத்தில் சன் குழும பிரச்சினைக்குள் பாஜக மூக்கை நுழைத்தால் திமுகவுக்கு நல்லதல்ல. ஆகவே இதற்கு மேல் இதை வளர விடாமல் முதல்வர் ஸ்டாலின் தான் இரு தரப்பையும் அழைத்துப் பேசி பிரச்சினையை சுமுகமாக முடிக்க வேண்டும்.
தான் கேட்டதை தராவிட்டாலும் பொதுவான மதிப்பீட்டாளர் ஒருவரை வைத்து இரண்டு தரப்பும் ஏற்கும் வகையில் ஒரு நியாயத்தை தனக்குச் சொல்ல வேண்டும், ஸ்டாலின் மத்தியஸ்தராக இருந்து அதை செய்து கொடுக்க வேண்டும் என நினைக்கிறார் தயாநிதி. இப்படி சுமுகமாக பேசி முடித்துவிட்டால் மாறன் குடும்பத்தையும் சங்கடத்தில் இருந்து மீட்கலாம், சன் டிவி சப்போர்ட்டையும் திமுக தக்கவைத்துக் கொள்ளலாம்” என்கிறார்கள். – எஸ்.சண்மதி