புதுடெல்லி: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்தியா மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரபூர்வமான அறிக்கையை பார்த்தோம். அதில் ஜூன்28-ல் நடந்த வஜீரிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியாவை குற்றம்சாட்டி உள்ளது. இந்தியா இந்தக் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிக்கிறது. அதோடு கண்டனமும் தெரிவிக்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆப்கனிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த 2021 முதல் பாகிஸ்தானில் தலிபான்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தான் தாலிபான் என்ற தனி அமைப்பு இந்த தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஆப்கனிஸ்தானை ஒட்டிய கைபர் பக்துன்வா மாகாணத்தின் வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ வாகனங்கள் மீது வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனத்தை தற்கொலைப் படைத் தீவிரவாதி மோதியதில், ராணுவ வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பொதுமக்கள், உள்ளூர் அரசாங்க அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு ஹபிஸ் குல் பகதூர் குழு பொறுப்பேற்றுள்ள நிலையில் அதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.