அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் தாயகத்துக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை 1% ஆக குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகு நாட்டின் வருவாயை அதிகரிக்க பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன்படி, ‘ஒன் பிக் பியூட்டிபுள் பில்’ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வெளிநாட்டினர் தாயகத்துக்கு பணம் அனுப்ப 5% கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டது. பின்னர் அது 3.5% ஆக குறைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த மசோதாவின் திருத்தப்பட்ட இறுதி வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இதை வரும் ஜூலை 4-ம் தேதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதாவில், வெளிநாட்டினர் தாயகத்துக்கு பணம் அனுப்புவதற்கான கட்டணம் 3.5-லிருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் உள்ள கணக்குகளில் இருந்தோ, அமெரிக்காவின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலமோ பணம் அனுப்புவதற்கு இந்த கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டண அறிவிப்பு வரும் டிசம்பர் 31-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.