அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தில் எவ்வித குறைபாடு் இல்லை என்றும் மாணவர்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், .அதுதொடர்பாக உயர்கல்வித் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழகத்தில் உள்ள 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2025-2026 -ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற அதிகாரிப்பூர்வ இணையதளத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. இந்த இணையவழி விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி எவ்வித இடர்பாடும் இன்றி மாணவர்களின் பயன்பாட்டுக்காக தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
இதுவரை இந்த இணையதளத்தில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 915 மாணவர்கள் எந்தவித இடர்பாடும் இன்றி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 81,923 பேர் வெற்றிகரமாக சேர்க்கை பெற்றுள்ளனர். தற்போது 3-வதுகட்ட மாணவர் சேர்க்கைக்கான பணிகள் நடைபெறுகின்றன. மேலும், முதுநிலை மற்றும் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பப்பதிவும் தற்போது இந்த இணையதளத்தின் மூலமே தொடங்கப்பட்டு மாணவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
நாளிதழ்களில் வெளிவந்துள்ள செய்திபோல் இந்த இணையதளத்தில் எவ்வித குறைபாடுகளும் இல்லை. மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. www.tngasa.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பங்களை பதிவுசெய்து கொள்ளலாம். மேலும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் இணையதளம் (tndce.tn.gov.in) வழியாகவும் www.tngasa.in என்ற இணையதளத்தை சென்றடையலாம். எனவே, மாணவர்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.