பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்காக ஜூலை 2 முதல் 9 வரை 5 நாடுகளில் பயணம் மேற்கொள்கிறார். இப்பயணத்தில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிகா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஜூலை 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற உள்ளார். இதற்கான பயணத்தில் ஜூலை 2 முதல் 9 வரை பிரேசில் உள்ளிட்ட 5 நாடுகளில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.
பிரேசில் நாட்டில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு செல்லும் வழியில் ஜூலை 2 முதல் 5 வரை கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார். திரும்பும் வழியில் அவர் நமீபியா செல்கிறார். கானா, டிரினிடாட் & டொபாகோ, நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், அமைதி, பாதுகாப்பு, பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், செயற்கை நுண்ணறிவை பொறுப்புடன் பயன்படுத்துதல், காலநிலை நடவடிக்கை, சுகாதாரம், பொருளாதாரம், நிதி உள்ளிட்ட முக்கிய உலகளாவிய பிரச்சினைகள் குறித்து பிரதமர் கருத்துகளை பரிமாறிக் கொள்வார். இந்த மாநாட்டின் போது பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்புகளையும் மேற்கொள்வார். பின்னர் பிரேசிலில் அரசு முறை பயணம் மேற்கொள்ளும் அவர் பிரேசிலியா செல்வார்.
அங்கு பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா உடன் இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்துவார். வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், வேளாண்மை, சுகாதாரம், மக்கள் இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்து குறித்து அப்போது விவாதிக்கப்படும்.
பிரதமர் மோடியின் அர்ஜென்டினா பயணம், பாதுகாப்பு, விவசாயம், சுரங்கம், எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் இரு நாட்டு உறவை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.