புதுச்சேரி: புதுச்சேரி மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நாளை (ஜூன் 29) காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது. ஒருவர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அகில இந்திய அளவில் பாஜகவுக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கு மாநில தலைவர்கள், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். யூனியன் பிரதேசமான புதுவையில் பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார். இதற்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடைபெற உள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை காலை 10 முதல் 12 மணி வரை வேட்புமனு தாக்கல் நடக்கிறது. மதியம் ஒரு மணி முதல் 3 மணி வரை மனுக்களை திரும்பப்பெறலாம். இதற்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அதிகாரி அகிலன் வெளியிட்டுள்ளார்.
அநேகமாக ஒருவர் மட்டுமே மனு தாக்கல் செய்வார். அவரையே நாளை மறுநாள்(ஜூன் 30ம் தேதி) ஏகமனதாக மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் தருண்சுக் அறிவிக்க உள்ளார். புதிய மாநிலதலைவராக வி.பி.ராமலிங்கம் தேர்வு செய்யப்படலாம் என தெரிகிறது. இவர் நியமன எம்எல்ஏவாக இருந்து தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.