சென்னை: தேர்தலில் ஒருமுறைகூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இக்கட்சிகளின் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி விளக்கம் கோர தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு, 24 கட்சிகள் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த வகையில், அனைத்திந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அனைத்திந்திய பெண்கள் ஜனநாயக சுதந்திர கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக்கழகம், அப்பா – அம்மா மக்கள் கழகம், தேச மக்கள் முன்னேற்றக் கழகம், காமராஜர் மக்கள் கட்சி, இந்தியா மக்கள் முன்னேற்றக்கட்சி, இண்டியன்ஸ் விக்டரி பார்ட்டி, மகாபாரத் மகாஜன் சபா, மக்கள் நீதிக்கட்சி – இந்தியா, மீனவர் மக்கள் முன்னணி, நல்வளர்ச்சிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கும்,
தேசிய ஸ்தாபன காங்கிரஸ், தேசியவாத அறக்கட்டளை காங்கிரஸ், நியூ லைஃப் பீப்பிள்ஸ் பார்ட்டி, பசும்பொன் மக்கள் கழகம், சமூக மக்கள் கட்சி, தமிழ் மாநில கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, தமிழக ஸ்தாபன காங்கிரஸ், வளமான தமிழகம் கட்சி, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கட்சி ஆகிய 24 கட்சிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.