அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன், கிச்சா ரவி, பூவையார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். மகிழ்நன் வசனம் எழுதியுள்ளார். பி.எம்.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இந்தப் படம் பற்றி இயக்குநர் விஷால் வெங்கட் கூறியதாவது: இது நையாண்டி டிராமா படம். உலகத்தின் எந்த மூலையிலும் நடக்கக் கூடிய கதையை கொண்டது இந்தப் படம். ஒரு கற்பனை உலகத்தை நாங்கள் படைத்திருக்கிறோம். அந்த உலகத்தின் ஊர் ஒன்றில் ஒரு பிரச்சினை நடக்கிறது. கடவுள் நம்பிக்கை இருக்கிற ஒரு தரப்புக்கும், இல்லை என்கிற இன்னொரு தரப்புக்குமான பிரச்சினை அது. அதனால் பிரிந்திருக்கிற ஊரை இரண்டு நண்பர்கள் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பது கதை.
அந்த நண்பர்களாக அர்ஜுன் தாஸும், காளி வெங்கட்டும் நடித்துள்ளனர். இதில் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்கிற விஷயத்துக்குள் செல்லாமல், பொதுவான ஒரு கருத்தைச் சொல்கிறோம். டார்க் காமெடி கதை. ‘பாம்’ என்ற தலைப்பு உருவகமாக இன்னொரு விஷயத்தைப் பேசும். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆகஸ்டில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு விஷால் வெங்கட் கூறினார்.