டெஹ்ரான்: ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடுமையாக விமர்சித்துள்ளார்
இதுகுறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு ஒப்பந்தத்தை விரும்புவதில் உண்மையாக இருந்தால், ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா கொமேனியை அவமதிக்கும் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத வார்த்தைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, அவரது மில்லியன் கணக்கான இதயப்பூர்வமான ஆதரவாளர்களை காயப்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
நமது ஏவுகணைகளால் தகர்க்கப்படுவதைத் தவிர்க்க, இஸ்ரேலுக்கு ‘அப்பாவிடம்’ ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உலகுக்குக் காட்டிய மகத்தான சக்திவாய்ந்த ஈரான் மக்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் அவமானங்களை தயவுசெய்து கவனத்தில் கொள்ளாதீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், ஈரான் உச்ச தலைவர் கொமேனியை நன்றியுணர்வு இல்லாதவர் என்று குற்றம் சாட்டி, அவரை படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது பதிவுகளில்,”ஈரான் உச்ச தலைவர் எங்கு பதுங்கியிருந்தார் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும் உலகின் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல், அமெரிக்க ஆயுதப் படைகள் அவரை கொல்ல நான் அனுமதிக்கவில்லை. நான் அவரை மிகவும் அசிங்கமான மற்றும் அவமானகரமான மரணத்திலிருந்து காப்பாற்றினேன். அவர் அதற்கு ‘நன்றி, அதிபர் டிரம்ப்!’ என்று சொல்ல வேண்டியதில்லை” என்று தெரிவித்திருந்தார்.