சென்னை: நிலத்தடி நீருக்கான வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில், மத்திய அரசின் அறிவிப்பு நகலைஎரிக்கும் போராட்டம் இன்று நடத்தப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: நிலத்தடி நீரை முறைப்படுத்தும் வகையில், விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து, விவசாயிகளுக்கு வரி விதிக்கும் விதமாக ரூ.1,600 கோடியில் நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்தும் திட்டம் அமலாக்கப்பட உள்ளதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ஹெச்.எம்.பாட்டீல் அறிவித்துள்ளார்.
இது விவசாயிகளுக்கு எதிரான தாக்குதலாகும். தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களையே நம்பி உள்ளது. தமிழகத்துக்கான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையில், வேளாண்மை உற்பத்திக்கு அடிப்படையாக இருந்து வருவது நிலத்தடி நீர்தான். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின் சாதன கருவிகள் பழுதாகி வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும்.
திரும்ப பெறவேண்டும் நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும் என்ற அக்கறை விவசாயிகளுக்கும் இருக்கிறது. இதை மத்திய அரசு உணர வேண்டும். நீர் நிலைகளை தூர்வார, மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்த திட்டங்களை வகுப்பதற்காக நிதியை ஒதுக்கீடு செய்யாமல், விவசாயிகளை குறிவைத்து தாக்கும் வகையில் திட்டங்களை அறிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
நீண்ட போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்புக்கு பின்னர் தான் தமிழகத்தில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. அதை துண்டித்திடவே மத்திய அரசின் முன்னேற்பாடு இது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இதை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும். இவற்றை வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் மத்திய அரசின் உத்தரவு நகலை எரிக்கும் போராட்டம் நாளை (இன்று) நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்புமணி வலியுறுத்தல்: இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல், இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது.
நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்க அரசு நினைத்தால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நிலத்தடி நீரை சிக்கனமாகப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு வெகுமதிகளைக் கொடுத்து ஊக்குவிப்பதும்தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். வரி விதிப்பது சரியானதாக இருக்காது.
ஏற்கெனவே பல வகைகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நிலையில் வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதித்து விவசாயிகளை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடாது. அத்தகைய ஆபத்தான திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.